Publish Date: Thu, 28 Dec 2017 (16:56 IST)
Updated Date: Thu, 28 Dec 2017 (17:23 IST)
ஆளப் போகும் புத்தாண்டால்
நன்மை பெருகட்டும்!
நேற்று நடந்தவை எல்லாமே
ஒரு பேருந்து பயணத்தின்
நிகழ்வாகட்டும்
அது
சமூகத்தின் அடித்தளத்தை
அசைத்துப் பார்ப்பதாகவே
இருந்தாலும்
இனி வரும் நாட்கள்
மகிழ்ச்சி வனத்திற்கே
இட்டுச் செல்லட்டும்
ஒரு பாதி இன்பம்
மறு பாதி துன்பத்தை
குவளையில் ஊற்றி வைப்பது
யாரென்று, எப்போதென்று தெரியும்?
விதைத்தோம்
அறுவடை செய்தோம்
லாபம் பெற்றோம்
என்றில்லாது
இயற்கை சீற்றத்தாலும்
அதிகார வர்க்கத்தாலும்
சிக்கித் திணறும்
அறைகூவல்கள்
கோரிக்கை விடுப்புகள்
போராட்ட தினுசுகள்
எல்லாவற்றையும்
கேளிக்கை கூத்துகளாய்ப் பார்க்கும்
முகமூடிகளுக்கு
எப்போது
விவசாயிகளின் கண்ணீர்த் துளிகள் தெரியும்?
ஒருவன் வாழ்வை
இன்னொருவன் தீர்மானிப்பதற்குப் பெயர்தாம்
அரசாங்கமா?
ஒருவன் சுதந்திரத்தை
இன்னொருவன் பறிப்பதற்குப்
பெயர்தாம்
ஜனநாயகமா?
சமூகத்தின் கட்டமைப்பு என்பது
லஞ்சம் மற்றும் ஊழல்களால்
நெளிந்துகொண்டிருக்கிறது
அது
ஒரு நாளில் வெடிக்கும் தறுவாயினில்
ஆட்சி அதிகாரம் எல்லாமே
சிதறியொரு
காந்திய பூமியை தரிசிக்கும் நாள்
வெகு தொலைவிலில்லை.
-கோபால்தாசன்
webdunia
Publish Date: Thu, 28 Dec 2017 (16:56 IST)
Updated Date: Thu, 28 Dec 2017 (17:23 IST)