மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று பெண்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ததை கண்ட போக்குவரத்து பெண் காவலர் ஒருவர், அவர்களை நிறுத்தி கன்னத்தில் அறைந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே போக்குவரத்து காவல்துறையினர் சிறிய விதிமீறல்களுக்கு கூட கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் என்ற பகுதியில், பரபரப்பான சாலையில் இருசக்கர வாகனத்தில் மூன்று பெண்கள் பயணம் செய்வதாக தெரிகிறது. இதை கண்ட பெண் போக்குவரத்து காவலர் ஒருவர் அவர்களை நிறுத்தி விசாரித்துள்ளார். ஒரே பைக்கில் மூன்று பேர் வந்ததற்கு சட்டப்பூர்வமாக அபராதம் விதிப்பதற்கு பதிலாக, அந்த பெண் காவலர் அவர்களை கன்னத்தில் அறைந்து, கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது.
அந்தப் பெண்கள் தங்கள் தவறை உணர்ந்து, வருத்தம் தெரிவித்து, அபராதம் கட்ட தயாராக இருப்பதாக தெரிவித்தும், இனிமேல் இது போன்ற தவறை செய்ய மாட்டோம் என்று உறுதி அளித்தும், பெண் காவலர் கன்னத்தில் அறைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சட்டத்தை கையில் எடுத்து பெண்களை கன்னத்தில் அறைந்த அந்த பெண் போக்குவரத்து காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறி வருவது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.