பெங்களூரில் நடந்த ஒரு சோக சம்பவத்தில், அக்ஷய் என்ற 29 வயது இளைஞர் மரக்கிளை விழுந்து உயிரிழந்தார். கனமழை பெய்துகொண்டிருந்த நேரத்தில், இறைச்சி கடையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஸ்ரீனிவாஸ் நகரில் உள்ள தனது வீட்டருகே இந் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாலையில் விழுந்த மரக்கிளை அவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அக்ஷய், சில நாட்கள் தீவிர சிகிச்சை பெற்றும், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்துள்ளது. விபத்தில் அவரது மண்டை ஓடு 12 துண்டுகளாக சிதறியதாக கூறப்படுகிறது.
ஜூன் 15 அன்று மரக்கிளை விழுந்த நிலையில், வியாழக்கிழமை மதியம் அவர் மூளைச் சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த பதைபதைக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
ஹெல்மெட் அணிந்திருந்தால் இந்த விபத்தின் தீவிரத்தை குறைத்திருக்க முடியும் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். "சிறு தூர பயணங்களுக்குக்கூட ஹெல்மெட்டை புறக்கணிக்க வேண்டாம்" என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.