ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், பாதபட்டினம் பகுதியில் உள்ள மொண்டி கொல்ல தெருவில், கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நல்லி ராஜு என்பவருக்கும் மௌனிகா என்ற பெண்ணுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், மௌனிகாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.
மௌனிகாவின் கள்ளக்காதல் பற்றி அறிந்த கணவர் நல்லி ராஜு, தனது மனைவியை எச்சரித்து, அந்த உறவை விட்டுவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால், மௌனிகா இதனை பொருட்படுத்தாமல், உதயகுமாருடன் தொடர்ந்து உறவில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில், கணவர் நல்லி ராஜுவை கொலை செய்துவிட்டு, கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று மௌனிகா திட்டமிட்டுள்ளார்.
இதன்படி கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, மௌனிகா தான் சமைத்த உணவில் பத்து தூக்க மாத்திரைகளை கலந்து, அதனை நல்லி ராஜுவுக்குக் கொடுத்துள்ளார். உணவை உண்ட நல்லி ராஜு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, உதயகுமார் தனது நண்பர் மல்லிகார்ஜுனுடன் வீட்டிற்கு வந்து, நல்லி ராஜுவின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி மூச்சு திணறவைத்து கொலை செய்துவிட்டார்.
கொலைக்கு பிறகு, நல்லி ராஜுவின் உடலை உதயகுமாரும், மல்லிகார்ஜுனும் ஒரு இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று குடியிருப்புப் பகுதிக்கு அருகில் வீசிவிட்டுச் சென்றுவிட்டனர். பின்னர், மௌனிகா தனது கணவர் வீடு திரும்பவில்லை என உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்து நாடகமாடியுள்ளார்.
இந்த நிலையில் ஒரு இளைஞரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, உதயகுமார் மூட்டையுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிந்தது பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து, உதயகுமார், மௌனிகா மற்றும் மல்லிகார்ஜுன் ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்ததில், மௌனிகா தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து, மூவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.