கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி வயநாடு பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் உயிர்களை இழந்தனர். இந்த துயர சம்பவத்தில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரை இழந்த இளைஞர் ஒருவர், அதே தேதியையே தனது புதிய உணவகத்திற்கு பெயராக சூட்டியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், அவரது மன உறுதியையும் வெளிப்படுத்துகிறது.
உலகையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவில், தனது மனைவி, மூன்று குழந்தைகள் உட்பட குடும்பத்தின் 11 பேரைப் பலிகொடுத்தவர் நெளபல் என்ற இந்த இளைஞர். இந்த துயரத்தில் இருந்து மீண்டுவர அவருக்கு பல மாதங்கள் ஆனது. இந்த சோகத்தில் மூழ்கியிருந்த அவருக்கு, அவரது சமூகமும், பல தன்னார்வலர்களும் ஆதரவுக்கரம் நீட்டினர்.
தற்போது, அந்த நிலச்சரிவு நிகழ்ந்த ஜூலை 30ஆம் தேதியையே தனது புதிய உணவகத்தின் பெயராக வைத்து, நெளபல் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். "அந்த சோகத்தை மனதில் கொண்டுதான் இந்த உணவகத்திற்கு ஜூலை 30 என்ற பெயரை வைத்திருக்கிறேன்" என்று அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பலரும் அவருக்கு உதவி செய்த நிலையில், ஷாப்னா என்ற பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இந்த உணவகத்தை ஆரம்பித்த நெளபல் தற்போது அது சிறப்பாக செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.