அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்திற்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த விபத்தை ஏர் இந்தியாவின் பராமரிப்பு ஒப்பந்தம் துருக்கி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டதை இணைத்து வெளியாகும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மதியம் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா AI-171 (போயிங் 787) விமானம் சில வினாடிகளிலேயே மீண்டும் பூமியில் மோதி வெடித்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர 241 பேரும் பரிதாபமாக பலியானார்கள். இந்த விபத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்ததும் விபத்திற்கான காரணம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஏர் இந்தியாவின் பராமரிப்பு குறித்து பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலானது. அதை தொடர்ந்து பராமரிப்பு பணிகள் குறித்த கேள்வி எழுந்த நிலையில் சில ஊடகங்கள் ஏர் இந்தியா விமானங்களின் பராமரிப்பு ஒப்பந்தம் துருக்கியை சேர்ந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக கூறி சந்தேகம் எழுப்பியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த பரபரப்பு தகவல் குறித்து உண்மை சரிபார்ப்பு பணியை மேற்கொண்ட Anadolu Agency என்ற ஊடகம், விபத்திற்குள்ளான போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் துருக்கி நிறுவனத்தால் பராமரிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த புகைப்படங்களில் உள்ளது போயிங் 777 ரக விமானங்கள் என்பதும், போயிங் 777 ரக விமானங்களின் பராமரிப்பு ஒப்பந்தம்தான் துருக்கிய டெக்னிக்கல் நிறுவனத்தோடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K