அகமதாபாத் விமான விபத்து நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் அதில் பயணித்தவர்களின் கதைகள் மக்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.
நேற்று மதியம் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா AI-171 விமானத்தில் பயணித்த ஒவ்வொரு பயணியும் பல்வேறு கனவுகளுடன் புறப்பட்டு இருந்திருப்பார்கள். ஆனால் அவர்களின் கனவுகள் நொடிப்பொழுதில் அவர்களோடே மறைந்து போகுமென்று யாருமே அந்த சமயம் வரை எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்கள்.
அப்படியாக பல கனவுகளோடு பயணித்த குடும்பம்தான் ப்ரதீக் ஜோஷியின் குடும்பம். ப்ரதீக் ஜோஷி லண்டனில் மென்பொருள் துறையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக லண்டனில் பணிபுரிந்து வரும் அவருக்கு குடும்பம்தான் எல்லாம். அவரது மனைவி கோமி வ்யாஸ். இவர்களுக்கு மூன்று குழந்தைகள். மூத்த மகள் மிராயா மற்றும் இரட்டை ஆண் குழந்தைகள் ப்ரத்யுத் - நகுல். கோமி வ்யாஸ் உதய்பூரில் உள்ள பசிபிக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். ஆண்டில் சில முறை மட்டுமே குடும்பத்தை பார்க்க வரும் ப்ரதீக்கிற்கு மீத காலமெல்லாம் குழந்தைகளோடு வீடியோ காலில் பேசுவதுதான் ஆறுதல்.
ப்ரதீக் தனது குடும்பத்தை மொத்தமாக லண்டனுக்கு அழைத்துச் சென்று விட நீண்ட காலமாகவே திட்டமிட்டு வந்துள்ளார். இதற்காக லண்டன் குடிப்பெயர்வுக்கான ஆவணங்களை தயாரித்தல், குழந்தைகளுக்கு லண்டன் பள்ளியில் அட்மிஷன், திட்டமிடல் என அனைத்தையும் செய்தார். அனைத்து ஆவணங்களும் தயாராகி குடும்பம் லண்டனுக்கு புறப்படுவது உறுதியானது. அதன் பின்னர் கோமி வ்யாஸ் பசிபிக் மருத்துவ கல்லூரியில் தனது பணியை ராஜினாமா செய்தார்.
மொத்த குடும்பமும் மகிழ்ச்சியோடும், கனவுகளோடும் லண்டனுக்கு புறப்பட்டு ஏர் இந்தியா AI-171 விமானத்தில் ஏறினர். அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஒரு செல்பியும் எடுத்தனர். அந்த செல்பியை குடும்பத்திற்கு அனுப்பினர். ஆனால் அதுவே கடைசி செல்பியாக இருக்கும் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. லண்டன் கனவுகளோடு புறப்பட்ட அந்த குடும்பம் அடுத்த சில விநாடிகளிலேயே விமானத்தின் தீயோடு காற்றில் கரைந்த சோகம் ஒவ்வொருவர் நெஞ்சத்தையுமே உலுக்கியுள்ளது. அந்த கடைசி செல்பி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அந்த குடும்பத்தின் துயர முடிவு பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K