திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது தேவஸ்தானம் தரப்பில் பக்தர்களுக்கான ஒரு சூப்பர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பதி மலை அடிவாரத்திலேயே பக்தர்களின் வசதிக்காக சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்டமான ஒருங்கிணைந்த வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய வளாகத்தில் திருப்பதி மலைக்கு செல்வதற்கான பிரத்யேக பேருந்து நிலையம், தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்யும் கவுண்டர்கள் மற்றும் இதர அத்தியாவசிய வசதிகள் அனைத்தும் ஒரே இடத்தில் செய்து தரப்படும்.
முக்கியமாக, திருப்பதி மலை அடிவாரத்திலேயே பிரம்மாண்டமான அன்னதான கூடம் ஒன்று ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், தரிசனத்திற்கு செல்லும் முன்னரோ அல்லது தரிசனம் முடித்து திரும்பும் போதோ பக்தர்கள் மலை அடிவாரத்திலேயே உணவருந்த முடியும் என்பது பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இனி அறைகள் ஒதுக்கீடு மற்றும் அடிப்படை தேவைகளுக்காக திருமலை வரை சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த 20 ஏக்கர் நகர்ப்புற வளாகம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.