அலிபிரி அருகே அசைவ உணவு உட்கொண்ட இரண்டு ஊழியர்கள் மீது கடுமையான திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ரமாசாமி மற்றும் சரசம்மா என்ற அந்த இரண்டு ஊழியர்களும் அலிபிரி சோதனை சாவடிக்கு அருகில் அசைவ உணவு உட்கொண்டதாக கூறப்படுகிறது. திருமலைக்கு செல்லும் முக்கிய நுழைவாயிலாக அலிபிரி திகழ்வதால், அங்கு கோயில் புனிதத்தை காக்கும் வகையில் சைவ உணவு பழக்கம் கட்டாயமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஊழியர்கள் இருவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் மீது திருமலை II டவுன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேச அறநிலையச் சட்டம், பிரிவு 114ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
திருமலை எல்லைக்குள் அசைவ உணவு, மதுபானம் மற்றும் புகையிலைப் பொருட்கள் ஆகியவை கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளன என்று TTD அதிகாரிகள் தெரிவித்தனர்.