ரயில் டிக்கெட் புக் செய்வது மற்றும் தட்கல் புக்கிங், டிக்கெட் ரத்து செய்வது உள்ளிட்டவற்றில் ரயில்வே புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் இந்திய ரயில்வேயின் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயங்கி வரும் நிலையில் ஒவ்வொன்றிலும் முன்பதிவு காலம் போன்றவற்றில் உள்ள குழப்பங்களை தீர்க்கவும், டிக்கெட் பணத்தை திரும்ப பெறுதல் ஆகியவற்றை எளிமைப்படுத்தவும் புதிய விதிமுறைகளை ரயில்வே அமல்படுத்தியுள்ளது.
அதன்படி இனி எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் என ஒவ்வொரு ரயிலுக்கும் தனித்தனி முன்பதிவு கால அவகாசம் இருக்காது. இனி அனைத்து ரயில்களுக்கான முன்பதிவும் அடுத்த 90 நாட்களுக்கு திறக்கப்படுகிறது. இதனால் 3 மாத காலத்திற்குள் பயணத்தை திட்டமிடுபவர்கள் ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய காத்திராமல் உடனே புக் செய்து கொள்ளலாம்.
திடீரென பயணத்தை திட்டமிடுபவர்கள் தட்கல் புக்கிங்கை நம்பியே உள்ளனர். ஒரு ரயிலில் 30 சதவீத இடம் மட்டுமே தட்கலில் திறக்கப்படுகிறது. அனைத்து தட்கல் புக்கிங்கும் காலை 11 மணிக்கு தொடங்கும் நிலையில் பலருக்கு வலைதளம் வொர்க் ஆகாமல் போகிறது. இதனால் ஏசி வகுப்புகளுக்கான தட்கல் புக்கிங் தினசரி காலை 10 மணிக்கும், ஸ்லீப்பர் வகுப்புகள் தட்கல் புக்கிங் வழக்கம்போல தினசரி காலை 11 மணிக்கும் தொடங்கும்.
மேலும் ஒரு பயனர் ஒரு நாளைக்கு இரண்டு தட்கல் டிக்கெட்டுகளை மட்டுமே புக் செய்ய முடியும்.
ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்தவர்கள் 48 மணி நேரத்திற்கும் முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்தால் 75 சதவீத டிக்கெட் பணம் திரும்ப கிடைக்கும். ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கும் மேல் 48 மணி நேரத்திற்குள் கேன்சல் செய்தால் 50 சதவீத பணம் திரும்ப கிடைக்கும். 24 மணி நேரத்திற்குள் கேன்சல் செய்தால் ரீஃபண்ட் கிடையாது.
Edit by Prasanth.K