திருப்பதிக்கு வரும் பக்தர்கள் லட்டு வாங்குவதற்காக இனி நீண்ட வரிசைகளில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் தங்கள் லட்டுகளை டிஜிட்டல் முறையில் எளிதாக பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது லட்டு வாங்குவதற்காக ஒரு புதிய முறையை செயல்படுத்த உள்ளது. இந்த புதிய முறையின்படி, பக்தர்கள் லட்டு வாங்க வரிசைகளில் காத்திருக்க தேவையில்லை. டிஜிட்டல் முறையில் மிக எளிதாக லட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
இதன்படி, பக்தர்கள் தங்களது தரிசன டிக்கெட் எண்ணை அதற்காக வைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர், தங்களுக்குத் தேவையான லட்டுகளின் எண்ணிக்கையை தேர்ந்தெடுத்து, UPI அல்லது வேறு எந்த டிஜிட்டல் முறை மூலமும் பணம் செலுத்தி,லட்டுகளை இய்நதிரத்தின் மூலம் கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
தரிசன டிக்கெட் இல்லாமல் வரும் பக்தர்களும், தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்வதன் மூலம் இரண்டு லட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தற்போது, யூனியன் வங்கி மற்றும் கனரா வங்கி மூலம் லட்டு கவுண்டர்களில் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த இயந்திரங்கள் மூலம் பக்தர்கள் எளிதில் லட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.