ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், குறைந்தது 7 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று இரவு இரண்டாவது தளத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த தீ விபத்தின்போது, ICU-வில் இருந்த ஊழியர்கள் உடனடியாக தப்பி ஓடிவிட்டதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கடும் குற்றம் சாட்டியுள்ளனர். நச்சுப்புகை வேகமாக பரவியதால், கோமா நிலையில் இருந்த ஆறு பேர் உட்பட ஏழு பேர் பலியாகினர்.
ஊழியர்கள் ஓடிவிட்ட நிலையில், நோயாளி உதவியாளர்களே சிலரை மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர். தீயணைப்பு வசதிகள் எதுவும் இல்லை என்றும், இதனால் அலட்சியமே இறப்புகளுக்கு காரணம் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
சிகிச்சைப் பிரிவின் பொறுப்பாளர், கோமாவில் இருந்த நோயாளிகளை சிபிஆர் கொடுத்தும் காப்பாற்ற முடியவில்லை என்று தெரிவித்தார். மாநில முதலமைச்சர் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஊழியர்களின் அலட்சியம் குறித்து நேரில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.