ராஜஸ்தானை சேர்ந்த ஒரு தம்பதியினர், திருமண மற்றும் பிற விழாக்களில் பாத்திரம் கழுவும் செய்யும் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் மகன் ஷ்ரவன்குமார், நீட் தேர்வில் பெரும் சாதனை படைத்துள்ளார். இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஷ்ரவன்குமார், தனது +2 தேர்வில் 88 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், தற்போது நீட் தேர்வில் ஓபிசி பிரிவில் 4071வது இடத்தை பிடித்துள்ளார். ஏழை மாணவர்களுக்கான இலவச நீட் தேர்வுப் பயிற்சியில் படித்ததாகவும், தனது அம்மாவுக்கு மாநில அரசு இலவசமாக வழங்கிய இன்டர்நெட் இணைப்புடன் கூடிய மொபைல் ஃபோன் மூலம் வெளியுலகை தெரிந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் சுமார் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் உள்ள நிலையில், ஷ்ரவன்குமாருக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஷ்ரவன்குமார், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, அவரது கிராமமே இந்த வெற்றியை சிறப்பாகக் கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.