தமிழ்நாட்டில் உள்ள பல தனியார் பள்ளிகளில் நுழைவுத் தேர்வுகளுக்கான கோச்சிங் செண்டர்கள் நடத்தப்படும் நிலையில் அவற்றை தடை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு தனியார் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், அந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு சிறப்பம்சங்களை சேர்த்து வருகின்றனர். பள்ளி முடித்த மாணவர்கள் உயர் படிப்புகளுக்கு செல்ல பெரும்பாலும் நுழைவுத் தேர்வுகள் கட்டாயமாக உள்ள நிலையில் பல தனியார் பள்ளிகள் NEET, JEE, IIT உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க கோச்சிங் செண்டர்களை பள்ளியிலேயே நடத்துகின்றன.
அவ்வாறாக நடத்தப்படும் கோச்சிங் செண்டர்களில் படித்த மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெறும்போது, அந்த பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை படிக்க வைக்க பெற்றோர்கள் போட்டி போடுகின்றனர். இதனால் பள்ளி பாடங்களை விடவும், நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்றுவிப்பதிலேயே தனியார் பள்ளிகள் ஆர்வம் காட்டுவதாகவும், பள்ளி பாடத்திட்டத்தை முழுமையாக முடிப்பதில்லை என்றும் மாநில கல்விக் கொள்கை வரையறை குழு தெரிவித்துள்ளது.
பாடத்திட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் நடைபெறும் கோச்சிங் செண்டர்களை தடை செய்யவோ அல்லது வரையறுக்கவோ குழு ஒன்றை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கல்விக் கொள்கை வரையறை குழு பரிந்துரை செய்துள்ளது.
Edit by Prasanth.K