தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக் மதுபானக்கடைகள் தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளால் பலர் மதுக்கு அடிமையாவதாகவும், உடல் நலம் குன்றி பலியாவதும் தொடர்வதாக பல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவ்வாறாக கடந்த 2016ம் ஆண்டு சிதம்பரத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள் “டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மக்கள் போராடுவதை குற்றச்செயலாக கருத முடியாது. அமைதியாக போராடும் நபர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்வதே ஜனநாயக உரிமைக்கு எதிரானது” என்று கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
Edit by Prasanth.K