பொதுவாக பாம்புகள் மனிதர்களை கடிக்கும் சம்பவங்களையே நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், ஒரு வயது குழந்தை ஒன்று பாம்பையே கடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னாவை சேர்ந்த கோவிந்தா என்ற ஒரு வயது குழந்தை, தனது வீட்டின் முற்றத்தில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஒரு நாகப்பாம்பு அந்த குழந்தையின் அருகே வந்துள்ளது. குழந்தை அந்த பாம்பை கையில் எடுத்து, கடித்துள்ளது. நாகப்பாம்புவும் அந்த குழந்தையை கடித்த நிலையில், நாகப்பாம்பு உடனே இறந்துவிட்டது.
இந்த நிலையில், குழந்தையின் உடலில் விஷம் ஏற தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தை நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த குழந்தையின் பாட்டி கூறுகையில், "குழந்தை விளையாடி கொண்டிருந்தபோது திடீரென நாகப்பாம்பு வந்தது. என் பேரக்குழந்தை தான் பாம்பை பிடித்துக் கடித்தது என்று தெரிவித்தார்.
இந்த அசாதாரணமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.