பீகார் மாநிலத்தில் 35 லட்சம் வாக்காளர்கள் "காணாமல் போய்விட்டதாக" தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளின் அடிப்படையில், போலியான வாக்காளர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் சமயத்தில் வெளி மாநிலங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் உட்பட லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், பீகாரில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் முதல் கட்டம் முடிவடைந்துவிட்டதாகவும், மொத்தம் 7.23 கோடி வாக்காளர்களிடமிருந்து வாக்காளர் விவரக் குறிப்புகள் பெறப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் சுமார் 7 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளராகப் பதிவு செய்துள்ளனர் என்றும், 35 லட்சம் வாக்காளர்கள் நிரந்தரமாக இடம் பெயர்ந்துள்ளதால், அவர்களை 'காணவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 1.2 லட்சம் பேர் வாக்காளர் விவரக் குறிப்பு படிவங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்றால், பிறப்புச் சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் நகல் போன்ற கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.