கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு குகையில் ரஷ்யப் பெண் ஒருவர் தனது 6 வயது மற்றும் 4 வயது மகள்களுடன் வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த 40 வயதான நீனா குட்டினா என்பவர், தனது இரண்டு மகள்களுடன் வணிக விசாவில் இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் கோவாவில் சில நாட்கள் தங்கி இருந்த நிலையில், அதன்பின் கடற்கரை ஓரமாகவே பயணம் செய்து கர்நாடக மாநிலத்தில் உள்ள வனப்பகுதிக்கு வந்துள்ளார்.
அங்கு அவர் குகையில் தனது இரண்டு மகள்களுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும், முழுக்க முழுக்க இந்திய ஆன்மீக கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டு தியானம் செய்து வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் தான், அந்த பகுதிக்கு ரோந்து வந்த காவல் துறை அதிகாரிகள், துணிகள் உலர்த்தப்பட்டதை பார்த்தவுடன், "மனித நடமாட்டமே இல்லாத இந்த பகுதிகளில் யார் இருக்கிறார்கள்?" என்று பார்த்தபோது, குகையில் ரஷ்ய பெண்ணும் அவரது இரண்டு மகள்களும் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனை அடுத்து, அவர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்களது விசா காலாவதி ஆகிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மூவரையும் அரசு மகளிர் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.
இதன் பின்னர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் ரஷ்ய தூதரகத்தை தொடர்பு கொண்ட காவல் துறை அதிகாரிகள், அவரையும் அவரது குழந்தைகளையும் பாதுகாப்பாக ரஷ்யா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.