Publish Date: Sun, 02 Feb 2025 (11:44 IST)
Updated Date: Sun, 02 Feb 2025 (11:46 IST)
சபரிமலை உள்பட 18 கோவில்களில் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை, ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை உள்பட, நாடு முழுவதும் உள்ள 18 ஆன்மீக தலங்களில் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் உள்ள 'பர்வத்மாலா பரியோஜனா திட்டத்தில் இதனை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திட்டத்தின் படி, சபரிமலை ஐயப்பன் கோயில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயில், ஜம்முவில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயில், ஸ்ரீநகரில் உள்ள சங்கராச்சாரியார் கோயில் ஆகியவற்றில் ரோப் கார் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோயிலுக்கு, பால்டால் என்ற பகுதியில் இருந்து 11.6 கிலோமீட்டர் தொலைவுக்கு ரோப் கார் சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பம்பையில் இருந்து 2.62 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோப் கார் திட்டம் அமைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள பர்வதமலை, ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள அமர் கோட்டை, சத்ரபதி சிவாஜி பிறந்த மகாராஷ்டிராவின் ஷிவ்னேரி கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கும் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.