RCB அணியின் வெற்றி விழா நிகழ்ச்சி குறித்து காவல்துறை முன்பே எச்சரித்த நிலையில் அரசின் அழுத்தம் காரணமாக இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடந்த வெற்றி கொண்டாட்டத்தில் ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்கள் உட்பட 11 பேர் பலியான நிலையில், உயிரிழந்தோருக்கு கர்நாடக அரசு இழப்பீடு வழங்கியுள்ளது.
கடந்த 3ம் தேதிதான் ஆர்சிபி வெற்றி பெற்ற நிலையில் எந்த வித முன்னேற்பாடும் இல்லாமல் வேகவேகமாக அடுத்த நாளே பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வெற்றி விழாவை நடத்தியது ஏன் என கர்நாடக பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்
இந்நிலையில் வெற்றி பெற்ற மறுநாளே இந்த நிகழ்ச்சியை நடத்துவது சிரமம் என்றும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், மக்கள் பாதுகாப்பிற்காகவும் இந்த நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்தலாம் என்றும் காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 24 மணி நேரத்திற்குள் திரளான மக்கள் குவியப் போகும் ஒரு நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது இயலாத ஒன்று. இந்நிலையில்தான் இந்த துர் சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் வகையில் பேசியுள்ள கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா “இதை நாங்கள் செய்யவில்லை. இந்த கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை ஆர்சிபி அணியிடமோ, கர்நாடக கிரிக்கெட் சங்கத்திடமோ நாங்கள் ஏற்பாடு செய்ய சொல்லவில்லை. அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அது பெங்களூர் அணி என்பதால் நிகழ்ச்சியில் அரசு ஒரு பங்கு வகித்தது. அவ்வளவுதான்” எனக் கூறியுள்ளார்.
ஆனால் 24 மணி நேரத்திற்குள் பெரும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் ஏற்பாடுகளை செய்ய முடியாது என காவல்துறை கூறியிருந்தால், அதையும் மீறி அதற்கான அனுமதியை அளிக்க அழுத்தம் கொடுத்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Edit by Prasanth.K