பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அதை அடுத்து, நேற்று அதனை கொண்டாடும் வகையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமான விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவுக்கு லட்சக்கணக்கான ஆர்சிபி ரசிகர்கள் குவிந்த நிலையில், திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இந்த சம்பவம், கிரிக்கெட்டுக்கு ஒரு துயரமான நாள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். "ஆர்சிபி வெற்றி கொண்டாட்ட நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்," என்றும் அவர் கூறினார்.
மேலும், நடிகர் கமல்ஹாசன், "பெங்களூரில் ஆர்சிபி கொண்டாட்டத்தின் போது நடந்தது துயர சம்பவம். மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆறுதல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்," என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெங்களூர் அணியின் விராட் கோலி தெரிவித்த போது, "இந்த சம்பவத்தில் ஏற்பட்ட துயரத்தை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. முற்றிலும் நான் உடைந்து விட்டேன்," என்று கூறினார்.