பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியான நிலையில் அதற்கு இலவச டிக்கெட் வழங்குவதாக ஏற்பட்ட புரளியே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் 18 ஆண்டுகளில் முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்ற நிலையில், இந்த வெற்றி நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க ஏராளமான ஆர்சிபி ரசிகர்கள் சின்னசாமி மைதானத்தை நோக்கி படையெடுத்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழர்கள் உள்பட 11 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இலவச அனுமதி டிக்கெட் தருவதாக கிளம்பிய புரளியே இந்த கூட்ட நெரிசலுக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. சின்னச்சாமி மைதானத்தில் 13 நுழைவாயில்கள் உள்ளன. இதில் நுழைவாயில் 9 மற்றும் 10 ஆகியவை கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் செல்வதற்காக ஒதுக்கப்பட்ட நிலையில் நுழைவாயில் 5,6,7 உள்ளிட்டவை கிரிக்கெட் வீரர்கள் நுழையும் பாதைக்கு அருகே இருந்ததால் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது.கேட் எண் 7-ல் உள்ளே செல்வதற்கான இலவச அனுமதி டிக்கெட் வழங்கப்படுவதாக கூறப்பட்டதால் பலர் அங்கு நெருக்கி பிடித்து சென்றதாக கூறியுள்ளனர். ஆனால் அப்படி எந்த இலவச டிக்கெட்டும் வழங்கப்படவில்லை.
7வது வாயிலில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் வெளியேற ஆம்புலன்ஸ் வரவும் செல்லவும் கூட தாமதம் ஏற்பட்டது, போலீஸார் கூட்டத்தை கட்டுப்படுத்த தெரியாமல் மக்களை அங்கும் இங்கும் அடித்து விரட்டிக் கொண்டே இருந்தனர். என்ன செய்கிறோம் என்ற திட்டமிடலே அவர்களுக்கு இல்லை என்று கூட்ட நெரிசலில் சிக்கிய பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Edit by Prasanth.K