Publish Date: Sun, 04 Oct 2020 (09:44 IST)
Updated Date: Sun, 04 Oct 2020 (09:46 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 19 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கொதித்து எழுந்துள்ளனர். தடையையும் மீறி நேரடியாக அந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் அளித்ததோடு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்
ஆனால் அதே நேரத்தில் ஹாத்ராஸ் சம்பவம் நடந்த ஒரு இரண்டு நாட்கள் கழித்து ராஜஸ்தானில் இளம்பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த பலாத்கார சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் படவில்லை என்பதும் விசாரணை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
ஹாத்ராஸ் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு பொங்கிய ராகுல்காந்தி, ராஜஸ்தானில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு இதுவரை வாயை திறக்கவில்லை. உத்தரப் பிரதேச மாநில அரசியலில் பிரியங்கா காந்தியை முன்னிறுத்த வேண்டும் என்பதற்காகவே அவர் ஹாத்ராஸ் விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாகவும், ராஜஸ்தானில் தலைகீழாக நின்றாலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியாது என்பதால் அங்கு நடந்த பாலியல் சம்பவத்தை அவர் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர். இதற்கு ராகுல்காந்தி என்ன விளக்கம் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்