புனேவில் இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் கொரியர் டெலிவரி நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறிய நிலையில், அந்த கொரியர் நபர் அவருடைய நெருங்கிய நண்பர் என்றும், அவர் மீதான கோபத்தின் காரணமாகவே அவர் புகார் அளித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
காவல்துறையிடம் அந்தப் பெண் அளித்துள்ள வாக்குமூலத்தில், அன்றைய தினம் பாலியல் உறவுக்குத் தான் தயாராக இல்லை என்றும், ஆனால் அந்த நபர் தன்னை வலுக்கட்டாயமாக துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணையின்படி, 22 வயதான பெண் புதன்கிழமை அந்த நபரை தனக்கு தெரியாது என்று கூறினார். ஆனால் இருவரும் ஏற்கனவே நண்பர்களாக பழகி வந்துள்ளதாகவும், அந்த பெண்ணின் வீட்டிற்கு அந்த நபர் பலமுறை வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தனது வாக்குமூலத்தில், அப்பெண் ஆரம்பத்தில் காவல்துறைக்குத் தவறான தகவல்களை அளித்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
"அன்றைய தினம் தான் பாலியல் உறவுக்கு தயாராக இல்லை என்றும், ஆனால் அவரது நண்பர் அவரை வலுக்கட்டாயமாக அதில் ஈடுபடுத்தியதாகவும் எனவே அந்த கோபத்தின் காரணமாக, தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்" என்று காவல் ஆணையர் அமிதேஷ் குமார் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
மேலும் கூடுதல் விசாரணையில், இருவரது குடும்பங்களுக்கும் ஒருவரையொருவர் தெரியும் என்பதும் தெரிய வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.