ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தண்டனைக்குரிய வழக்குகளில் கைது செய்யப்பட்டால், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் என்ற மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்படும் வரை யாரும் குற்றவாளிகள் அல்ல" என்ற அடிப்படை சட்ட கொள்கைக்கு இந்த மசோதா எதிரானது என எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன. மேலும், கைது செய்யப்பட்டாலே பதவி பறிக்கப்படுவது, அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் கேலிக்கூத்தாக்கும் செயல் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இந்த மசோதா, ஆளும் கட்சிக்கு அரசியல் ரீதியாக எதிராக இருப்பவர்களை பழிவாங்க பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இதனால், மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த மசோதா குறித்து அமித்ஷா கூறுகையில், பொது வாழ்வில் ஊழலை தடுக்கவும், குற்றப் பின்னணி கொண்டவர்கள் உயர்பதவிகளில் இருப்பதை தடுக்கவும் இந்த மசோதா அவசியமானது என்றார்.