டெல்லி ரயில் நிலையத்தில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதை அடுத்து, பிளாட்பார்ம் டிக்கெட் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கும்பமேளாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் டெல்லி வழியாக சென்று கொண்டிருக்கும் நிலையில், டெல்லியில் இருந்து செல்லும் ரயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட கூட்ட நெரிசல் காரணமாக 18 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், டெல்லியில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் வழங்கப்படாது என்றும், இன்னும் ஒரு வாரத்துக்கு இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, டெல்லி ரயில் நிலைய பாதுகாப்புக்காக உள்ளூர் காவல்துறையுடன் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.