மும்பையில் ஆட்டோவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை மோசமான பிட்புல் வகை நாயை விட்டு கடிக்க வைத்து அதை நாயின் உரிமையாளர் ரசித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சிறுவர்கள் சிலர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு தனது பிட்புல் வகை வளர்ப்பு நாயோடு வந்த சொஹைல் ஹசன் கான் என்ற நபர், விளையாடிய சிறுவர்களின் ஒருவனை பிடித்து அருகில் இருந்த ஆட்டோவில் அமர வைத்துள்ளார். பின்னர் தனது நாயை அவிழ்த்துவிட்டு அதோடு விளையாடுமாறு வற்புறுத்தியுள்ளார்.
சிறுவன் பயந்து போய் விட்டுவிடுங்கள் என கெஞ்சியும் அவர் கேட்கவில்லை. அதற்குள் அந்த வளர்ப்பு நாய் சிறுவனை தாக்கத் தொடங்கியுள்ளது. சிறுவனை நாய் பல இடங்களில் கடிக்க சிறுவன் அலறி அடித்து ஓடுவதை, சொஹைல் கான் சிரித்துக் கொண்டே பார்க்கிறார். இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதை தொடர்ந்து சொஹைல் கானை போலீஸார் கைது செய்த நிலையில், நாய் சிறுவனை கடிக்கவில்லை என்றும், அவனது ஆடையைதான் கடித்து இழுத்ததாகவும் சொஹைல் தரப்பில் கூற அவருக்கு நோட்டீஸ் மட்டும் அனுப்பி விடுவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K