ஒடிசா மாநிலம், கேந்துஜார் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில், இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் இரவு முழுவதும் பள்ளிக்குள் பூட்டப்பட்டு, மறுநாள் காலை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரை காப்பாற்றி கொள்ள மாணவி மேற்கொண்ட முயற்சி, அவரை படுகாயமடைய செய்துள்ளது.
நேற்று மாலை பள்ளி முடிந்ததும், மற்ற மாணவர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்ற பிறகு, அந்த மாணவி உள்ளே இருந்ததை கவனிக்காமல், பள்ளியின் வாயிற்காவலர் பிரதான வாயிலை பூட்டிச் சென்றுள்ளார். இரவு முழுவதும் அந்த மாணவி வீட்டுக்கு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் பதற்றமடைந்துள்ளனர். கிராம மக்கள் இரவு முழுவதும் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பள்ளிக்குள் சிக்கிக்கொண்ட அந்த மாணவி, அங்கிருந்து வெளியேற முயற்சித்துள்ளார். வகுப்பறையின் ஜன்னலில் இருந்த இரும்புக் கம்பிகளை உடைத்து, அதன் வழியாக வெளியே வர முயன்றபோது, அவரது தலை அதில் மாட்டிக்கொண்டது. இந்த முயற்சியில் மாணவிக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
மறுநாள் காலை, அவ்வழியாக சென்ற கிராம மக்கள் மாணவி ஜன்னலில் சிக்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், மாணவியை சிரமப்பட்டு மீட்டனர். உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராம மக்கள் பள்ளி ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.