சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியதால், நகர் முழுவதும் இதமான குளிர்ந்த காலநிலை நிலவியது.
தென்கிழக்கு வங்கக்கடலின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நவம்பர் 13 முதல் நவம்பர் 18 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் காலை 10 மணிக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
சென்னை நகரின் சில பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்திருந்தது.
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, இன்று அதிகாலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்ட சென்னையில், காலை 10 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது.
அம்பத்தூர், பட்டரவாக்கம், கொரட்டூர், பாடி, வில்லிவாக்கம், கோயம்பேடு, அண்ணா நகர், வடபழனி, அசோக் நகர், கிண்டி, ஆலந்தூர், தரமணி உட்படப் பல்வேறு இடங்களில் பரவலாக மிதமான மழை பெய்தது.
இந்த மழையின் காரணமாகப் பல நாட்களாக இருந்த வெப்பம் தணிந்து, சென்னையில் பொதுவான சூழல் சற்று குளிர்ந்து, இதமான காலநிலை நிலவுகிறது.