பெட்ரோலில் எத்தனால் கலப்பது தொடர்பான அரசின் திட்டத்தால் தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைவதாக தனக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டுகளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக மறுத்துள்ளார். "நேர்மையாக எப்படி சம்பாதிப்பது என்பது எனக்கு தெரியும். எனது மூளைக்கு மாதத்திற்கு ரூ.200 கோடி சம்பாதிக்கும் திறன் உள்ளது" என்று அவர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான கட்கரி, தனக்கு குடும்பத் தொழில் மூலம் போதுமான வருமானம் வருவதாகவும், நிதி பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும் கூறினார்.
அமைச்சர் நிதின் கட்கரியின் மகன்கள் எத்தனால் தொடர்பான தொழிலில் இருப்பதால், அவர் இந்தத் திட்டத்தை ஆதரிப்பதாக கூறப்பட்டது. இக்குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரித்த கட்கரி, தனது மகன்களுக்கு சட்டத்திற்கு உட்பட்டு தொழில் செய்ய தான் ஆலோசனை மட்டுமே வழங்குவதாகவும், ஊழலில் ஈடுபடவில்லை என்றும் விளக்கமளித்தார்.
மேலும், எனக்கு போதுமான வருமானம் உள்ளது. நேர்மையாக எப்படிச் சம்பாதிப்பது என்பது எனக்கு தெரியும். எனக்கு மாதத்திற்கு ₹200 கோடி சம்பாதிக்கும் திறன் உள்ளது. எனது வணிக முடிவுகள் லாபத்தால் அல்ல, வளர்ச்சியால் உந்தப்படுகின்றன," என்று அவர் கூறினார்.