ராஜஸ்தான் மாநிலத்தில் லட்சக்கணக்கில் செலவு செய்து புதிதாக போடப்பட்ட ஒரு மாநில நெடுஞ்சாலை, திறப்பு விழாவுக்கு முன்னரே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் லட்சக்கணக்கில் செலவு செய்து மாநில நெடுஞ்சாலை ஒன்று போடப்பட்டது. ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெய்த கனமழை காரணமாக அந்த சாலை முற்றிலும் அடித்து செல்லப்பட்டது. புதிதாக சாலை போடப்பட்டதற்கான அடையாளமே தெரியாத அளவுக்கு இருந்ததால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சாலையின் தற்போதைய நிலை குறித்த வீடியோக்களை பொதுமக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஒரு வீடியோவில், சாலை இடிந்து விழுந்தபோது ஒரு மின் கம்பம் தண்ணீரில் விழுந்த காட்சியும் பதிவாகியுள்ளது. இந்த சாலை ஆறு மாதங்களுக்கு முன்புதான் போட தொடங்கப்பட்ட நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்னரே சாலை முற்றிலும் பழுதாகிவிட்டதை அடுத்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
"ஒரே ஒரு வெள்ளத்திற்குக்கூட தாங்காத இந்த சாலைக்கு அரசும், ஒபப்ந்ததாரரும் என்ன பதில் சொல்ல போகிறார்கள்?" என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.