உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2017 முதல் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் நியமனத்தில் மிகப்பெரிய மோசடி அம்பலமாகியுள்ளது. இதில் நியமிக்கப்பட்ட 203 ஆசிரியர்களில், 202 பேர் போலி கல்வி சான்றிதழ்களைப் பயன்படுத்தி பணிக்கு சேர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மோசடி, ஜே.எஸ். பல்கலைக்கழகம் என்ற கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டதாக கூறப்படும் போலியான பி.பி.எட். பட்டங்கள் மூலம் அரங்கேறியுள்ளது. உண்மையில், இந்த பல்கலைக்கழகத்திற்கு பி.பி.எட். படிப்புக்கு அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் 100 மட்டுமே. ஆனால், இந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெற்றதாகக் கூறிக்கொண்டு 2082 பேர் அரசு வேலைகளுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்ததை அடுத்து, இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
இதனை தொடர்ந்து, ஜே.எஸ். பல்கலைக்கழகத்தின் மூலம் சான்றிதழ் பெற்று பணிக்கு சேர்ந்தவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது, 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட 203 பேரில், 202 பேரின் சான்றிதழ்கள் போலியானவை என்பதும், ஒரே ஒருவரின் பட்டம் மட்டுமே உண்மையானது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி ஆவணங்களை பயன்படுத்திப் பணிக்கு சேர்ந்தவர்கள் மற்றும் பல்கலை சம்பந்தப்பட்டவர்கள் மீது தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.