உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண்ணுக்கும், ராஜஸ்தான் மாநிலம் கிஷான்கரை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணத்தை ஜிதேந்திரா என்ற திருமணத் தரகர் மூலம் பேசி முடித்ததாக மாப்பிள்ளை வீட்டார் தெரிவித்தனர். இதற்காக அந்த தரகருக்கு ₹2 லட்சம் தரப்பட்டுள்ளது.
திருமணம் ஜெய்ப்பூரில் பாரம்பரிய சடங்குகளுடன், இசை, இனிப்புகள் மற்றும் கொண்டாட்டங்களுடன் சிறப்பாக நடைபெற்றது.
திருமணத்தின் முதல் இரவில், தம்பதியினர் படுக்கையறைக்கு சென்றபோது, அந்த பெண் ஒரு விநோதமான கோரிக்கையை முன்வைத்தார். "இன்று இரவு நாம் ஒன்றாக படுக்க முடியாது; இது எங்கள் சம்பிரதாயத்திற்கு எதிரானது" என்று கூறி, மாப்பிள்ளையை தனிமையில் இருக்கச் செய்தார்.
அதிகாலை 3 மணியளவில் மாப்பிள்ளை தண்ணீர் குடிக்க எழுந்தபோது, அந்தப் பெண் மாயமாகி இருந்தார். மேலும், அவர் அறையில் இருந்த பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடியிருந்தார்.
குடும்பத்தினர் உடனடியாக பெண்ணை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை . ராகேஷ் என்ற உறவினர் மாதன்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருமணத் தரகர் ஜிதேந்திரா மற்றும் அந்த பெண் இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.