ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில், 10 ஆண்டுகளாக காதலித்த ஒரு பெண்ணை, அவர் முஸ்லிம் என்பதால் கொன்றதாகவும், திருமணத்திற்கு அழுத்தம் கொடுத்ததாலேயே கொலை செய்ததாகவும் ஒரு வாலிபர் அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபரிதாபாத்தை சேர்ந்த தீபக் என்பவரும், ஷிப்பா என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஒரு தனியார் வங்கியில் காப்பீட்டு ஆலோசகராக பணிபுரிந்து வந்த ஷிப்பா, நேற்று ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த ஹோட்டல் அறையிலிருந்து அவருடைய காதலன் தீபக் தனியாக வெளியேறியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது. உடனடியாக தீபக்கை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் ஷிப்பாவை 10 ஆண்டுகளாக காதலித்ததாகவும், ஆனால் அவர் முஸ்லிம் என்று தெரிந்தவுடன் அவருடைய தொடர்பை துண்டிக்க விரும்பியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஷிப்பா திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாலேயே அவரை கொலை செய்ததாகவும் தீபக் கூறியுள்ளார்.
இது குறித்து ஷிப்பாவின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.