இன்று முதல் அதாவது ஜூலை 1 முதல் வங்கிக் கிரெடிட் கார்டுகள், ஆதார்-பான் இணைப்பு, வருமான வரி தாக்கல் போன்ற பல பிரிவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
புதிய பான் கார்டுக்கு இனி விண்ணப்பிக்கும்போது, ஆதார் விவரங்கள் கட்டாயம் சரிபார்க்கப்பட வேண்டும் என்ற புதிய விதி அமலுக்கு வந்துள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே அறிவித்தபடி, பான் கார்டு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31-க்குள் தங்கள் ஆதார் எண்ணுடன் அதைப் பிணைக்க வேண்டும்.
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31 என்பதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இனி, செப்டம்பர் 15 வரை வருமான வரி தாக்கல் செய்யலாம். இந்த மாற்றம் வரி செலுத்துவோருக்கு கூடுதலாக 46 நாட்கள் அவகாசம் அளிக்கிறது.
மேலும், ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு இன்று முதல் ஆதார் அட்டை சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் கிரெடிட் கார்டு விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றம் என்னவெனில் எஸ்பிஐ உள்ளிட்ட முன்னணி வங்கிகள், தங்கள் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு இதுவரை அளித்து வந்த விமான விபத்து காப்பீட்டு இனி கிடையாது. மாத பில்களில் செலுத்தப்படும் குறைந்தபட்ச தொகையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதேபோல் எச்டிஎஃப்சி வங்கியும், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி, ஏடிஎம் பணப் பரிவர்த்தனைகளுக்கான சேவை கட்டண முறையில் திருத்தங்களை இன்று முதல் அமல்படுத்தியுள்ளது. ஒரு மாதத்தில் முதல் 5 பணப் பரிவர்த்தனைகளுக்குச் சேவை கட்டணம் இல்லை. அதற்குப் பிறகு செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும்.
ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்தும்போது, மெட்ரோ நகரங்களில் 3 இலவச பரிவர்த்தனைகள் செய்து கொள்ளலாம். சிறிய நகரங்களில் 5 இலவச பரிவர்த்தனைகள் செய்யலாம். இதற்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 செலுத்த வேண்டும்.
இந்த அனைத்து புதிய நடைமுறைகளும் இன்றுமுதல் அமலுக்கு வருகின்றன.