திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.ஏ.டி மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த 26 வயது சிவப்பிரியா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மருத்துவ கல்வித் துறை இயக்குநர் குழு அமைத்து இரண்டு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் 22 அன்று பிரசவம் முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சிவப்பிரியாவுக்கு, மருத்துவமனை பிரசவ அறையிலேயே 'அசினெட்டோபாக்டர்' தொற்று ஏற்பட்டதாகவும், இதுவே மரணத்திற்கு காரணம் என்றும் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
மருத்துவமனை நிர்வாகம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. வெளியேறியபோது அவருக்கு பிரச்சனை இல்லை என்றும், வீடு திரும்பிய பின்னரே அறிகுறிகள் தோன்றியதாகவும், பிரசவ அறையில் தொற்று ஏற்பட சாத்தியமில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அக்டோபர் 26 அன்று மீண்டும் அனுமதிக்கப்பட்ட சிவப்பிரியாநேற்று முன் தினம் உயிரிழந்தார். இந்த சிறப்பு விசாரணை, மரணத்திற்கான உண்மைக் காரணத்தையும், குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.