கேரளாவில் கப்பலை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், ரூ.9,531 கோடியை இழப்பீடாக கொடுத்தால் மட்டுமே அந்த கப்பலை விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் கடந்த மே மாதம் ஆலப்புழா கடற்கரையில் கப்பல் ஒன்று மூழ்கியதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டது. இதனை அடுத்து, அந்தக் கப்பல் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.6 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், அதே நிறுவனத்தின் மற்றொரு கப்பல் தற்போது கேரளாவுக்கு வந்த நிலையில், அந்த கப்பலை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மே மாதம் மூழ்கிய கப்பலால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ரூ.9,531 கோடி இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தான் இந்தக் கப்பல் கைது செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கப்பல் நிறுவனம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
மே மாதம் மூழ்கிய கப்பலால் கேரளாவில் உள்ள கடலோரப் பகுதிகள் சுற்றுச்சூழல் பெரும் அளவில் பாதிக்கப்பட்டதாகவும், அதற்காகத்தான் இந்த இழப்பீடு என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே மும்பை மற்றும் சென்னையில் கப்பல்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கேரளாவிலும் ஒரு கப்பல் கைது செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.