Publish Date: Sat, 07 Mar 2020 (11:23 IST)
Updated Date: Sat, 07 Mar 2020 (11:26 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் மக்கள் பாதிப்படைந்துள்ள சூழலில் கேரளாவில் பறவை காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 31 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்படவில்லை, என்றாலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் ஆரம்பத்தில் கொரோனா அறிகுறிகளுடன் 3 பேர் கண்டறியப்பட்டாலும் தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையின் பேரில அவர்கள் பூரண நலம் பெற்றார்கள். இந்நிலையில் பறவை காய்ச்சல் தொற்று கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது. கோழிக்கோடு பகுதியில் பறவைக்காய்ச்சல் பரவுவதாக சுகாதாரத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் இருவருக்கு பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பறவைக்காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரளா அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள கால்நடை பண்ணைகள், கோழி பண்ணைகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பண்ணைகளை சுற்றியுள்ள மக்கள் வாழும் பகுதிகளிலும் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.