Publish Date: Tue, 01 Oct 2019 (20:04 IST)
Updated Date: Tue, 01 Oct 2019 (20:06 IST)
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய கடந்த மாதம் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தரையிறங்க இருந்த நிலையில், திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனை அடுத்து விக்ரம் லேண்டரை மீண்டும் தொடர்பு கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளும் நாசா விஞ்ஞானிகளும் அடுத்தடுத்து செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை
இந்த நிலையில் கடந்த மாதம் 21ஆம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் இரவு தொடங்கி ஆரம்பித்துவிட்டதால், விக்ரம் லேண்டரை இனிமேல் தொடர்பு கொள்ள முடியாது என்று விஞ்ஞானிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர். தமிழக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களும் இதனை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நிலவின் தென் துருவப் பகுதியில் தற்போது இரவு இருந்தாலும் மீண்டும் பகல் தொடங்கிய உடன் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சி செய்வோம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் கூறியிருந்தார். இதனால் லேண்டரை தேடும் பணி தொடரும் என்றே கருதப்பட்டது . இதனை தற்போது நாசாவும் உறுதி செய்துள்ளது
நிலவில் பகல் பகுதி தோன்றியவுடன் இஸ்ரோ நிறுவனத்துடன் சேர்ந்து நாங்களும் தேட முயற்சி செய்வோம் என்று நாசா கூறியிருப்பதால் ஏதாவது ஒரு அதிர்ஷ்டம் கிடைத்து மீண்டும் லேண்டரை தொடர்பு கொண்டு அதனை இயங்க வைக்கும் வாய்ப்பு உள்ளதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்