Publish Date: Tue, 26 May 2020 (15:03 IST)
Updated Date: Tue, 26 May 2020 (17:15 IST)
குவைத்தில் அனுமதி இல்லாமல் தங்கி இருந்த 12,000 இந்தியர்கள் முகாம்களில் இப்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குவைத் இந்தியர்கள் அதிகமாக வேலை செய்யும் நாடுகளில் ஒன்று. அதே போல அங்கு முறையான அனுமதி இல்லாமலும் பலர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் இந்தியர்களை சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, தாயகத்திற்கு அனுப்பத் தயாராக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்களுக்கு நேற்றிரவு உணவுக் கொடுக்கப்படவில்லை என சொல்லி போராட்டம் நடத்தியுள்ளனர். அவ்வாறு போராட்டம் நடத்தியவர்களை அடித்தும் முட்டிப்போட சொல்லியும் அவமானப் படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபோல வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீண்டும் தாய்நாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு கண்டும் காணாதது போல இருப்பது குறிப்பிடத்தக்கது.