Publish Date: Tue, 26 May 2020 (14:28 IST)
Updated Date: Tue, 26 May 2020 (14:30 IST)
புதுச்சேரியில் ஊரடங்கு காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், மதுக் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கொரோனா முன்னெச்சரிக்கை கருதிக் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்தது.
இதனிடையே, புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு, நேற்று முதல் அனைத்து மதுபான கடைகளும் திறக்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து இந்துக் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் புதுச்சேரி நகர மற்றும் கிராமப் பகுதிகளில்தான் உள்ள 108 இந்து கோவில்களுக்கு முன்பு தோப்புக்கரணம் போட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
மதுக்கடைகளைத் திறக்க அனுமதியளித்த அரசு, உடனடியாக கோவில்களைத் திறக்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், இந்து ஆலயங்களை திறக்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் தோப்புகரணம் போடும் போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில்,ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் முன்பாக தோப்புகரணம் போடும் போராட்டம் நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இந்த போராட்டத்தில் 4 பேர் மட்டுமே பங்கு கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. இதனால் 4 பேர் மட்டும் கலந்து கொண்டனர் தோப்புக்கரணம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தோப்புக்கரணம் போடும்போது மதுக்கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் திறக்கும் தமிழக அரசு கோவில்களை திறக்க மறுப்பது ஏன் என்று முழக்கங்களை எழுப்பினர்.