ஆறு ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத, பதிவு செய்யப்பட்ட 345 அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்க இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 345 அரசியல் கட்சிகள் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த கட்சிகளின் அலுவலகங்களும் பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி, 2800க்கும் மேற்பட்ட அடிப்படை நிபந்தனைகளை கூட பூர்த்தி செய்ய இந்தக் கட்சிகள் தவறி உள்ளது.
இதனை அடுத்து, இந்த கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், 21 நாட்களுக்குள் பதில் இல்லை என்றால் அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
அரசியல் கட்சி பதிவை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுப்பதாகவும், அரசியல் செயல்முறையில் அதிக வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்னும் சில நாட்களில் இந்த 345 கட்சிகளின் பெயரையும் தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.