இந்தியா மிகவும் வலிமையான நாடு; இந்த விமான விபத்தை எளிதில் சமாளித்துவிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப், அகமதாபாத் விமான விபத்து குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் இருந்து லண்டன் கிளம்பிச் சென்ற ஏர் இந்தியா விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த ஒரே ஒருவரை தவிர 241 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இந்த விமான விபத்து குறித்து இந்திய தலைவர்களும், உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இது குறித்துத் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
"இந்தியாவுக்கு நாம் என்ன உதவி செய்ய வேண்டுமானாலும் நிச்சயம் செய்வோம் என்று நான் ஏற்கனவே அவர்களிடம் தெரிவித்துள்ளேன். இந்த விமான விபத்து போக்குவரத்து வரலாற்றிலேயே மிக மோசமானது. ஆனால், அதே நேரத்தில் இந்தியா ஒரு பெரிய நாடு, வலிமையான நாடு; அதை இவர்கள் நிச்சயம் எளிதில் சமாளிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
மேலும், நம்மால் முடிந்த எந்த உதவியும் அங்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்று நான் அவர்களிடம் தெரியப்படுத்தியுள்ளேன்," என்று கூறியுள்ளார்.