Publish Date: Tue, 06 Aug 2019 (18:36 IST)
Updated Date: Tue, 06 Aug 2019 (18:38 IST)
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கி இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவால் பாகிஸ்தானில் போர் பதட்டம் எழுந்துள்ளது.
காஷ்மீருக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து சட்டத்தை ரத்து செய்து மாநிலங்களவையிலும், மக்களவையிலும் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இதன் மூலம் ஒரு போர் அபாயத்தை அரசு ஏற்படுத்தியிருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானில் கூட்டப்பட்ட கூட்டத்தில் பிரதமர் இம்ரான்கான் போருக்கான முழக்கத்தை விடுத்திருப்பது உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய இம்ரான்கான் “பிரச்சினை இப்போது மிகவும் தீவிரமாகியுள்ளது. விடுதலை இயக்கங்களை அவர்கள் இன்னும் அதிகமாக ஒதுக்குவார்கள். காஷ்மீர் மக்களை அவர்கள் மனிதர்களாகவே மதிக்கவில்லை. இதனால் புல்வாமா போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடக்கும்.
திப்பு சுல்தான் வழியில் கடைசி துளி இரத்தம் இருக்கும் வரை போராடுவோம். இந்த யுத்தத்தில் யாரும் வெல்லப்போவதில்லை. இது அணு ஆயுத மிரட்டல் அல்ல. ஆனால் விளைவுகள் மோசமாக இருக்கும். சர்வதேச அமைப்புகளிடம் இந்த பிரச்சினையை கொண்டு செல்வோம். காஷ்மீர்க்காக குரல் கொடுப்போம்” என அவர் பேசியுள்ளார்.
இதனால் போர் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது. இந்திய – பாகிஸ்தான் எல்லைகளில் ராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.