இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்துள்ளதை தொகுதி வாரியாக அம்பலப்படுத்துவேன் என ராகுல்காந்தி பேசியுள்ளார்.
நடந்து முடிந்த பல மாநில சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டு, ஏராளமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக ராகுல்காந்தி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள தேர்தல் ஆணையம் ராகுல்காந்தியிடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் வாக்காளர் உரிமை என்ற பெயரில் ராகுல்காந்தி யாத்திரையை தொடங்கியுள்ளார். பீகாரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி “வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிடிபட்ட பிறகும் என்னிடம் பிரமாண பத்திரம் கேட்கிறார்கள். வாக்கு திருட்டை சும்மா விட முடியாது.
தேர்தல் ஆணையத்திற்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நாங்கள் ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதியிலும் உங்கள் வாக்கு திருட்டை கண்டுபிடித்து மக்கள் முன் வைப்போம். வாக்கு திருட்டு என்பது பாரத மாதாவின் ஆன்மா மீதான தாக்குதல். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது வாக்கு திருட்டில் ஈடுபட்ட உங்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K