கேரள முதல்வர் பினராயி விஜயனின் வீடு மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மிரட்டலை தொடர்ந்து, காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் இந்த இரு இடங்களிலும் சல்லடை போட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை , மாவட்ட நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மர்ம மின்னஞ்சல் வந்தது. அதில், முதல்வர் இல்லம் மற்றும் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனடியாக செயல்பட்ட காவல்துறை, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படை, மற்றும் மோப்ப நாய்களுடன் இணைந்து இரண்டு இடங்களிலும் முழுமையான சோதனை நடத்தியது.
நீண்ட சோதனைக்கு பிறகு, எந்த வெடிபொருட்களும் கண்டறியப்படவில்லை. இதனால், இந்த மிரட்டல் ஒரு புரளி என காவல்துறை உறுதி செய்தது. இந்த மின்னஞ்சலில் தமிழக அரசியல் பற்றிய சில குறிப்புகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.