பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையிலும், ரயில்வே அமைப்பின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கிலும், இந்திய ரயில்வே தனது டிக்கெட் மற்றும் முன்பதிவு நடைமுறைகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையிலான ரயில்வே அமைச்சகம், இந்தப் புதிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. இதில் முன்கூட்டியே சார்ட் தயாரித்தல், மேம்படுத்தப்பட்ட முன்பதிவு அமைப்புகள் மற்றும் தட்கல் முன்பதிவுகளுக்கான வலுவான அங்கீகாரம் ஆகியவை அடங்கும்.
தற்போது, ஒரு ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு சார்ட் தயாரிக்கப்படுகிறது. இது பயணிகளுக்கு, குறிப்பாக அருகாமையில் அல்லது தொலைதூர இடங்களில் இருந்து வந்து ரயிலை பிடிக்க வேண்டியவர்களுக்கு, ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், ரயில்வே இனி ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு சார்ட்டைத் தயாரிக்கும்.
குறிப்பாக, பிற்பகல் 2 மணி மணிக்கு முன் புறப்படும் ரயில்களுக்கான சார்ட், முந்தைய நாள் இரவு 9:00 மணிக்குள் தயாராகிவிடும். இந்த மாற்றம் படிப்படியாக அமல்படுத்தப்படும், இதனால் செயல்பாட்டில் எந்த இடையூறும் ஏற்படாது. இந்த மாற்றத்தால், காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு முன்னதாகவே தெளிவு கிடைக்கும், தேவைப்பட்டால் மாற்று ஏற்பாடுகளை செய்ய இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.