சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சொந்தமான நான்கு கிலோ தங்கம் காணாமல் போனதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை கோவிலின் துவாரபாலகர் சிலைகளுக்கு தங்கத்தகடு பதிப்பதற்காக பக்தர்களால் வழங்கப்பட்ட 42 கிலோ தங்கத்தில், தற்போது 38 கிலோ மட்டுமே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போன நான்கு கிலோ தங்கத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்பதால், இது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இந்த விவகாரம் குறித்துக் கேரள உயர்நீதிமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. காணாமல் போன தங்கம் குறித்து மூன்று வாரங்களுக்குள் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேவசம் விஜிலென்ஸ் துறைக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
யார் இந்த திருட்டில் ஈடுபட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம், கோவிலின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், சபரிமலை பக்தர்களுக்கு மத்தியில் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.