Publish Date: Fri, 29 Nov 2019 (13:52 IST)
Updated Date: Fri, 29 Nov 2019 (13:56 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுப் பாலில் அதிக அளவு தண்ணீர் கலக்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் சோபன் பிளாக் பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 176 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பகுதி அம்மாநிலத்திலேயே மிகவும் பின் தங்கிய பகுதியாக இருந்து வருகிறது. அதனால் பெரும்பாலான மாணவர்கள் பள்ளியில் கொடுக்கப்பட்டு வரும் மதிய உணவு மற்றும் பால் ஆகியவற்றையே பெரிதும் நம்பியுள்ளனர். இந்நிலையில் இப்பள்ளியில் நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியளித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் 85 மாணவர்களுக்கு வெறும் ஒரு லிட்டர் பாலில் ஒரு வாளி தண்ணீர் கலந்து காய்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்படி பாலில் அதிகத் தண்ணீர் கலக்கப்படுவதை பஞ்சாயத்து உறுப்பினர் தேவ் கலியா என்பவர் வீடியோவாகப் பதிவு செய்து மாவட்டக் கல்வி அதிகாரிக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மேல் உரிய நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளனர்.