டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகிய இருவரையும் கைது செய்த அமலாக்கத்துறை முக்கிய அதிகாரி கபில்ராஜ் மத்திய அரசுப் பணியை திடீரென ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2009 ஆம் ஆண்டு இந்திய வருவாய் பணி அதிகாரியாகச் சேர்ந்து, 16 ஆண்டுகள் மத்திய அரசில் பல்வேறு பணிகளில் பணியாற்றியவர் கபில்ராஜ். இவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. எட்டு ஆண்டுகள் அமலாக்கத்துறையில் பணியாற்றிய நிலையில், டெல்லியில் உள்ள ஜிஎஸ்டி பிரிவில் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மேற்பார்வையில் தான் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். அதேபோல், அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கிலும் இவர்தான் அவரை கைது செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு, அவர்களது பதில்களை உன்னிப்பாக கவனித்து, அந்த பதில்களில் இருந்தே மேலும் பல கேள்விகளை கேட்டுத் திணறடிப்பார் என்று கபில்ராஜ் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
ஓய்வு பெற இன்னும் 15 ஆண்டுகள் இருக்கும் நிலையில், அவர் திடீரென ராஜினாமா செய்தது ஏன் என்பது பெரும் மர்மமாகவே உள்ளது. இந்த திடீர் ராஜினாமா குறித்து மேலும் தகவல்கள் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.